இந்தியா
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தும் ராகுல், கார்கே!

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
புதிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்றி, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் பல திட்டங்களுக்கான அர்த்தங்கள், அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களின் தரவுகள் முழுமை பெறாது என்று நான் அஞ்சுகிறேன். இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் முக்கிய கடமையாகும். ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாமல் இருக்கிறது. ஆகவே சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்திட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வலியுறுத்தல்
கார்கேவின் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கருத்தை ஆமோதித்துள்ள ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அவர்களே, சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலம் அளிக்கப்பட வேண்டும் என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. இதற்காக நீங்கள் இந்த மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை விவரங்களை உடனே வெளியிடுங்கள். மேலும், இந்தியாவில் எவ்வளவு பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என தெரிவியுங்கள். 50% இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.