தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் காவல் துறைக்கு அவசரத் தேவைக்காக அழைக்கப்படும் ‘100’ என்கிற எண்ணிற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் உள்ள முதல்வர் வீட்டுக்கும், சேலத்தில் உள்ள வீட்டுக்கும் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், கடும் சோதனைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
ஆனால், அச்சப்படும் வகையில் சந்தேகத்துக்கு இடமான எந்த சம்பவங்களும் இதுவரை நடக்கவில்லை எனவும், இது வெறுமனே அச்சமூட்டக் கொடுக்கப்பட்ட மிரட்டல் போன் அழைப்பு தான் என்றும் காவல் துறை தரப்பு கருதுகிறது.
சசிகலா, இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பதால் மேலும் பரபரப்புக் கூடியுள்ளது.























