தமிழ்நாடு
திமுக பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு போடாதீர்கள்: அண்ணாமலை
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரத்தில் அவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தபோது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு போடுங்கள் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு சில மாதங்களிலேயே சலிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் திமுக செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் கட்சியாக பாஜக மட்டுமே தமிழகத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் அதனை திமுக தனது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செயல்படுத்தி வருவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். மேலும் வாக்குக்காக திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் அவர் பேசினார்.