தமிழ்நாடு
லாக்கப் மரணத்தை தவிர்க்க இது ஒன்று தான் வழி: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எப்போதாவது நடந்து வந்த லாக்கப் மரணம் தற்போது அடிக்கடி நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றாலே உயிருடன் திரும்பி வருவோமா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ராஜசேகர்என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் லாக்கப்பில் மர்மமாக மரணமடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லாக்கப் மரணங்கள் தொடர்வதை அடுத்து காவல் துறையினருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தப்பட்டால் காவல் நிலையங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் லாக்கப் மரணத்தில் குற்றவாளி யார் என்பதையும் உடனடியாக தெரிந்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற ரீதியில் அவர் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தும் காவல்துறையினர் முதலில் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்துவார்கள் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.