இந்தியா
ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதித்த ஏர் இந்தியா… என்ன காரணம்?
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த சம்பவத்திற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் இந்திய விமானத்துறை அபராதம் விதித்தது.
இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய அரசிடம் இருந்து விமான நிறுவனத்தை வாங்கும்போது அதன் ஊழியர்களையும் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தது. ஆனால் தங்கும் இடங்கள் உள்பட ஒரு சில சலுகைகள் வழங்கப்படாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கி இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை காலி செய்யாத ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது டிசம்பர் மாத சம்பளத்தில் 15 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை குறைத்து பெறுவார்கள் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இனியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தால் வரும் நாட்களில் கூடுதல் தொகை அபராதமாக சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மொத்தம் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பளம் உள்பட பிறவற்றிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சேத கட்டணமாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் பொறுப்பு கட்டணம், அபராத வாடகை ஆகியவையும் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஏர் இந்தியா வீடுகளை காலி செய்யாத ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியும், ஊழியர்கள் தொடர்ந்து காலி செய்யாமல் இருப்பதால் அபராதத்துடன் கூடிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாதமும் காலி செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்திருப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.