உலகம்
பணி நீக்கத்திற்கு பின் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி நடவடிக்கை: கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி!
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பது தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ,வட்டி உயர்வு ஆகியவை காரணமாக பெரும் நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாமல் இருந்தன. இதனை அடுத்து உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தன.
நிறுவனங்களின் செலவை குறைக்கவும், வருவாய் அதிகரிக்கவும் வேலை நீக்க நடவடிக்கை தவிர வேறு வழியில்லை என கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் விளக்கம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 12000 ஊழியர்கள் வேலை நீ க்கம் செய்யப்பட்டனர். கூகுள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலர் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு நான் முழு பொறுப்பேற்க்கிறேன் என்றும் வேறு வழியின்றி 12000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார். திறமை வாய்ந்த சிலரிடமிருந்து விடை பெறுவதால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் விகிதம் குறைவதால் வேறு வழியில்லாமல் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பணிநீக்க நடவடிக்கையை அடுத்து தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் வருடாந்திர போனஸ் குறைக்கப்படும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் போனஸ் மற்றும் மானியங்கள் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக போனஸ் குறைக்கப்படும் என்றும் மானியங்கள் கிட்டதட்ட நிறுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.