இந்தியா
சரிவிலும் ஒரு ஏற்றம்.. 442 டாலர் மில்லியன் ஆர்டரை பெற்ற அதானி க்ரீன் எனர்ஜி..!
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகாரணமாக சரிவடைந்தது என்பதும் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் சரிவடைந்ததால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ஒரு பக்கம் தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் அதானி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 442 மில்லியன் டாலர் ஒப்பந்தமும் அதானி நிறுவனத்திற்கு புதிதாக கிடைத்துள்ளது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், 442 மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளது. 350 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் அவை தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.
கடந்த ஒரு வருடமாக இலங்கையில் மின்வெட்டு அதிகரித்து வருவதால் இலங்கையில் போதுமான அளவு அனல் மற்றும் நிலக்கரி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை துரிதப்படுத்த இலங்கை முடிவு செய்துள்ளது. இதனால் மோசமான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட கடந்த வாரம் இலங்கையில் மின் கட்டணங்கள் 66 சதவீதம் உயர்த்தப்பட்டன.
இந்த நிலையில் அதானி குழும அதிகாரிகள் கொழும்பில் இலங்கையுடனான பல திட்டங்களை மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் மிகப்பெரிய துறைமுகத்தில் 700 மில்லியன் டாலர் முனையத் திட்டத்தை நிர்மாணிப்பதிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதானி கிரீன் எனர்ஜியின் இந்த காற்றாலை மின் திட்டம் 1,500 முதல் 2,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின் ஆற்றலை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் 7 பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இதுவரை $125 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தாலும், இந்த நடவடிக்கையை இந்தியா மீதான “கணக்கிடப்பட்ட தாக்குதல்” என்று அழைத்தாலும், அதானி குழுமம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.