சினிமா
‘பெண்களை இப்படி மதிப்பிடாதீர்கள்’: சமீரா ரெட்டி!
பெண்களை இப்படி மதிப்பிடாதீர்கள் என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. பிறகு, ‘அசல்’, ‘வெடி’ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருப்பவர் சமூக வலைதளங்களில் இன்ஃபுளூயன்சராக முழு நேரமாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய உடல் குறித்து சமீரா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது, “நான் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகவும் உள்ளேன். இந்த நிலையில் பெண்களுடைய உடல், நிறம் போன்றவற்றை வைத்து மதிப்பிடுவது அநாகரீகமானது. குழந்தை பெற்ற பிறகு என்னுடைய உருவத்தையோ, நரை முடியையோ, குழந்தை பிறப்பினால் என் உடலில் ஏற்பட்டுள்ள தழும்புகளையும் நான் என்றைக்குமே மறைக்க வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. பெண்கள் எப்போதும் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். நம் ஆரோக்கியம் என்பது நம் சார்ந்தது மட்டும் கிடையாது. நம்முடைய குடும்பத்திற்கும் இது அவசியமானது. நாம் சொல்லிக் கொடுக்கும் முறைகளை தான் நம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள். அதனால் அவர்களுக்கு சிறுவயதிலேயே நொறுக்கு தீனி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றினால் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லது” என சமீரா பேசியுள்ளார்.