தமிழ்நாடு
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு: தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய திருப்புதல் தேர்வு நாளை முதல் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பதும் இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி திருப்புதல் தேர்வுக்கு முதல் முறையாக அரசு தேர்வுத் துறையின் வினாத்தாள் வழங்க உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் திருப்புதல் தேர்வு வழங்கப்பட உள்ளதாகவும் எனவே இது ஒரு மினி பொதுத்தேர்வு போலவே நடத்தப்படும் என்றும் இந்த அனுபவம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் போது பயன்படும் வகையில் இருக்கும் என்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்தக்கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு வினாத்தாள் மட்டுமின்றி திருப்புதல் தேர்வு திருத்தும் பணியும் பொதுத்தேர்வு போலவே நடைபெறும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ள நிலையில் அதை மீண்டும் அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















