இந்தியா
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: விண்ணப்பம் செய்தது ஜான்சன் & ஜான்சன்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோவாக்சின் உள்பட இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையை தொடங்கிவிட்டன. இரண்டு வயது முதல் குழந்தைகளுக்கான பரிசோதனை தடுப்பூசி பரிசோதனை ஆரம்பித்து விட்டதாகவும் உலகிலேயே இந்தியாவில்தான் 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தும் முறை பின்பற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. 12 வயது முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பித்த நிலையில் மத்திய அரசு அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே பெரியவர்களுக்கான தடுப்பூசி போடுவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது தெரிந்ததே.


















