தமிழ்நாடு
வாக்குப்பதிவுக்கு தேர்தல் முடிவுக்கும் ஒரு மாத இடைவெளி- சீமான் கேட்கும் முக்கிய கேள்வி!

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மே 2 ஆம் தேதி, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணுவதற்கும் எதற்கு இத்தனை நாட்கள் இடைவெளி என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சென்னையில் வாக்குச் செலுத்திவிட்ட பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சீமான் இது குறித்து கூறியதாவது:-
மனிதக் கழிவுகளை மனிதனையே அள்ள வைத்துவிட்டு வாக்குகளை இயந்திரத்தில் பதிவு செய்யச் சொல்கின்றனர். அமெரிக்காவில் இது தலைகீழாக உள்ளது. ஒருவருக்குச் செலுத்தும் வாக்கு மற்றவருக்குப் போகும் வாய்ப்பும் உள்ளது. இதுவொரு ஜனநாயகக் கூத்து.

பணம் கொடுப்பது தெரிந்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது. பத்தாண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடை எனப் பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பயம் வரும். ஆனால், சாலையில் செல்லும் சாமானியர்களையே தேர்தல் ஆணையம் பிடிக்கிறது.
வாக்குகளை எண்ணுவதற்கு ஏன் இத்தனை நாட்கள் என்பது குறித்து யார் பேசுகிறார்கள்? நான் ஒருவன்தான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாட்டுக்கே 7 கட்டங்களாக நடத்திவிட்டு மேற்கு வங்கத்திற்கு 8 கட்டங்களாக ஏன் தேர்தல் நடத்த வேண்டும்? டிஜிட்டல் இந்தியா எனப் பேசுகிறீர்கள்.
அமெரிக்காவிலேயே ஒரு நாளில் வாக்குப்பதிவு முடித்து முடிவுகளைச் சொல்லிவிடுகின்றனர். எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?

தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு போடுவார்கள்? நாங்கள் அடங்கியிருப்போம். நீங்கள் அடங்கியிருப்பிர்களா? என்னமோ நடக்கிறது? நாங்களும் வேறு வழியில்லாமல் இந்தப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.


















