உலகம்
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிரடி தகவல்!

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஒசாமா பின்லேடன் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனையடுத்து தனது தந்தையை கொன்ற அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்குவேன் என எச்சரித்தார் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன்.
ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருக்கும் ஹம்சா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா. இதனையடுத்து ஹம்ஸாவை அமெரிக்க மிகத்தீவிரமாக தேடி வந்தது. அவரது இருப்பிடம் குறித்து தகவல் தருபவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அரசின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அவர் இறந்த இடம் மற்றும் தேதி குறித்தான விபரங்கள் இல்லை.



















