ஆரோக்கியம்
… * வீட்டில் நிகழும் இயற்கை மரணங்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற இனி மருத்துவச் சான்று கட்டாயம் இல்லை… தமிழ்நாடு அரசு உத்தரவு…

வீட்டில் இயற்கையாக நிகழும் மரணங்களைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதில் பொதுமக்களுக்கு இருந்த நடைமுறைச் சக்கல்களை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வயது முதிர்வு, மாரடைப்பு அல்லது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் மரணம் சம்பவிக்கம்போது அதற்கு இறப்பு சான்றிதழ் பெற உள்ளாட்சி அமைப்புகள் மருத்துவச் சான்றிதழை MCCD Form 1 A கட்டாயமாகக் கேட்டு வந்தன. இதனால் முறையான மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் உயிரிழப்பவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் பிறப்பு இறப்பு பதிவாளர் அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
1969 ம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி (2023 ம் ஆண்டு திருத்தப்பட்டபடி) பிரிவு 10(3)ன் கீழ் மருத்துவமனை அல்லாத இடங்களில் (வீட்டில்) மரணம் நிகழும்போது அந்த நபர் உயிரிழப்பதற்கு முன்னதாக மருத்துவர் எவரிடமும் சிகிச்சை பெறவில்லையெனில் இறப்புச் சான்றிதழ் பெற மருத்துவச் சான்று (எம்சிசிடி) சமர்ப்பிப்பது கட்டாயமல்ல. ஒருவேளை இறப்பு பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டுமே சட்டப்பிரிவு 21 ன் படி பதிவாளர் விசாரணை நடத்தி மரணத்தை பதிவு செய்ய அதிகாரம் உண்டு. இந்த உத்தரவின் மூலம் வீட்டில் இயற்கையாக மரணமடைபவர்களின் சான்றிதழைப் பெற இனி பொதுமக்கள் தேவையற்ற அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்காது. சட்டப்படி உரிய தகவல்களை அளிப்பதன் மூலமே எளிதாக இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
















