வணிகம்
ரூ. 12,760 கோடி லாபம் வந்தும் ஊதிய உயர்வு இல்லையா? TCS ஊழியர்கள் ஏமாற்றம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.12,760 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இருப்பினும், நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாகும்.
TCS பொதுவாக ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு அது தாமதிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் லக்காட், நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவர், ஊதிய உயர்வுக்கு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஆண்டின் மற்ற பகுதியில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலைமை, நிறுவன ஊழியர்களிடம் ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு திட்டங்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு TCS நிறுவனம் வழங்கிய 42,000 இளநிலை இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதிகளை நிறைவேற்றும் என உறுதியளித்துள்ளது. ஆனால் அவர்கள் வேலைக்கு அமர்வது என்பது நிறுவத்தின் வணிக சூழ்நிலை பொறுத்து அமையும். 2025-26 நிதியாண்டுக்குள் மேலும் 40,000 இளநிலை இEngineersஐ பணியில் அமர்த்தும் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது வணிக வளர்ச்சி மற்றும் சந்தை நிலைமைகளைப் பொறுத்து மாறக்கூடியது.
நிதி நிலைமைகளைப் பார்க்கும்போது, கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் TCS நிறுவனத்தின் நிகர லாபம் 6% அதிகரித்து ரூ.12,760 கோடியாகவும், மொத்த வருமானம் 1.3% உயர்ந்து ரூ.63,437 கோடியாகவும் உள்ளது. ஆனால் கான்ஸ்டன்ட் கரன்சி அடிப்படையில் வருமானம் 3% குறைந்துள்ளது. ஒட்டுமொத்தம், நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் லாப விகிதம் 24.5% ஆக இருந்து, 0.3% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை தற்போது 6.13 லட்சமாக உள்ளதோடு, கடந்த ஆண்டைவிட 6,000 பேர் அதிகரித்துள்ளது.





















