தமிழ்நாடு
சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் மார்ச் 31-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மார்ச் 31-ம் தேதி முதல் உயர்த்துவதாகத் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
எனவே சென்னையில் இருந்து வெளியில் செல்லும் ஒவ்வொரு காரும் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
இந்தியாவில் உள்ள 566 சுங்கச் சாவடிகளில் 48 தமிழ்நாட்டில் உள்ளன. இந்நிலையில் 4 சக்கர வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை 5 சதவிகிதமும், லாரிகள், டிரக்குகள் சுங்க கட்டணத்தை 10 சதவிகிதம் வரையும் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை பரிந்துரைத்து இருந்தது.
மேலும் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு மற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து டோல்கேட்களையும் அகற்ற வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.