வணிகம்
8வது ஊதியக்குழுவில் கம்யூடட் பென்ஷன் காலம் 12 ஆண்டுகளாக குறையுமா? ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்ப்பு!

கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றமா? 8வது ஊதியக்குழுவில் புதிய பரிந்துரைக்கு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூடட் பென்ஷன் (Commuted Pension) விதிகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. தற்போது, ஓய்வூதியத்தில் 40% வரை தொகையை ஒருமுறை (Lump Sum) எடுக்க அனுமதி உள்ளது. இதற்குப் பதிலாக, அந்த அளவிற்குச் சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் 15 ஆண்டுகளுக்கு குறைக்கப்படுகிறது. அதன் பின் மட்டுமே முழு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆனால், ஓய்வூதிய சங்கங்கள் நீண்ட காலமாக இந்தக் கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே தங்கள் முழு ஓய்வூதியத்தை மீண்டும் பெறத் தொடங்குவார்கள்.
ஏற்கனவே 5வது ஊதியக்குழுவின் போது, இந்த காலத்தை 12 ஆண்டுகளாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், அரசு அதை ஏற்கவில்லை. 6வது மற்றும் 7வது ஊதியக்குழுக்களும் இதுகுறித்து எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை. உச்ச நீதிமன்றமும், “ஆபத்து காரணி” காரணமாக, 15 ஆண்டு காலத்தைக் கொள்கை ரீதியாக நியாயப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 8வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு அனுப்பும் நிலையில், இந்தக் கோரிக்கை மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், இந்த முறை அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.















