சினிமா
‘விடுதலை’ சவாலானது- வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, ” இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார்.
நடிகர் சூரி பேசியதாவது, ” எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி. கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீவ் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார். நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன். பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குக் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி”.
நடிகர் விஜய்சேதுபதி, ” இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. ‘வடசென்னை2’ கதை எனக்குத் தெரியும். நன்றாக உள்ளது. ‘விடுதலை’ படத்திற்கு எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது முக்கியமானதாக பார்க்கிறேன். ராஜா சாரோட இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள்”.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, ” இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார். ராஜா சாரிடம் வேலை பார்த்தது முன்பே சொன்னது போல மிகப்பெரிய அனுபவம். நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமை தான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும். இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பற்றி சொன்னேன் ஆனால் அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது. சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றி தான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார். சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம். வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது. கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார். இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய அசிஸ்டன்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.