உலகம்
சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணுக்கு 2 வருடம் ஜெயில், ரூ.20 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணொருவர் அங்கு உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக அவருக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பென்சில்வேனியாவில் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும்போது சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவர் வேண்டுமென்றே அங்கு இருந்த உணவுப் பொருட்களின் மீது இருமியதாகவும், சில உணவுப் பொருட்களின் மீது எச்சில் துப்பியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகிகள் அவர் மீது காவல்துறையினர் புகார் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்து அழைத்துச் சென்றனர். தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவ வேண்டும் என்பதற்காகவே இதை செய்ததாகவும் அந்த பெண் கைது செய்யப்பட்டபோது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் இருமிய உணவு பொருளின் மதிப்பு சுமார் 25 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் அவர் குடிபோதையில் இருந்ததால் அவ்வாறு செய்ததாகவும் தன்னை மன்னித்து கொள்ளுமாறும் கூறினார். அவருடைய மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, அந்த பெண்ணுக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் இரண்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் 8 ஆண்டுகள் தகுதிகாண் பட்டியலில் இருப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.