உலகம்
டிரம்பிற்கு சாதகமான முடிவை எடுத்த அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சி!

டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவில் வேலை செய்ய நுமதி வழங்கப்படும் எச்-1பி விசாவிற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் அதற்கு ஆதரவான முடிவுகளை அமெரிக்க நிறுவனங்களும் எடுக்கத் துவங்கியுள்ளது வெளிநாட்டில் இருந்து அங்குச் சென்று படிக்கும் மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்ற வருடத்துடன் ஒப்பிடும் பொது ஜூன் மாதம் வரையில் வெளிநாட்டில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களைத் தவிர்த்து அமெரிக்கக் குடியுரிமை உள்ளவர்களைப் பணிக்கு எடுப்பதை 19 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஃபெடரல் அரசு தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு இதுவரை 25 மில்லியன் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் 47 சதவீத நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டவர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதுவே 2017-ம் ஆண்டு 55 சதவீதமாக இருந்தது.
இந்த முடிவுகளை அமெரிக்க நிறுவனங்கள் எடுக்கக் காரணமாக இருப்பது எச்-1பி விசா விதிகள் கடுமையாக்கப்பட்டு இருப்பது மற்றும் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளுக்குத் தடை மற்றும் வரி உயர்வு போன்றவையே காரணங்கள் ஆகும்.
அது மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2017 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டு வரை 108,101 எச்-1பி விசாக்கள் பெறப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டு 114,503 விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது. முதுகலை பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் 52,002 என்பதில் இருந்து 45,405 ஆகக் குறைந்துள்ளது.















