தமிழ்நாடு
இனிமேல் இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது: அதிரடி உத்தரவு
நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய கட்டிடங்களை இடிக்க முயற்சித்த போது அந்த கட்டடங்களில் உள்ளவர்கள் தாக்கல் செய்த மனுவில் தாங்கள் மின்சார கட்டணம் வீட்டுவரி உள்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்துவதாகவும் எனவே தங்களுடைய வீடுகளை எடுக்க அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது என்றும் அதேபோல் சொத்துவரி உள்பட எந்த வரியையும் விதிப்பதற்கு முன்னர் அந்த கட்டிடம் சரியான இடத்தில் கட்டப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களுக்கு தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவை என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட எந்த பகுதியையும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.