வணிகம்
வேலைநீக்க நடவடிக்கை.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் ஐ டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 30 முதல் 40 சதவீதம் இருக்கலாம் என்றும் அந்த வகையில் பார்த்தால் அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டும் சுமார் 60,000 க்கு மேல் வேலை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியர்கள் அமெரிக்காவில் H1B மற்றும் L1விசாவில் சென்றுள்ள காரணத்தினால் வேலை இழந்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக மாற்று வேலை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லாவிட்டால் மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வேலை கிடைத்து சொகுசாக வாழ்ந்து வந்த இந்தியர்கள் அங்கேயே தங்கள் குழந்தைகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்து உள்ளனர். இந்த நிலையில் திடீரென வேலை இழந்த அவர்கள் குடும்பத்துடன் நாடு திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவசர அவசரமாக 60 நாட்களுக்குள் வேலை தேடும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் ஆனால் 60 நாட்களுக்குள் வேலை கிடைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளதால் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வேலை செய்த ஊழியர்களின் நிலை மிகவும் திண்டாட்டமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.