தமிழ்நாடு
கொடநாடு கொலைக்கும், ஜெயலலிதா மரணத்துக்கு ஏதோ தொடர்பு உள்ளது: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் கனிமொழி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை வீசி வரும் நிலையில் இந்த கொலைகளுக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எரிகிற நெருப்பில் ஊற்றுகிறார் திமுகவின் கனிமொழி.
திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கொடநாட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்களை திருடுவதற்காக கொள்ளை முயற்சி நடந்தது. கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஜெயலலிதாவின் மரணத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.
மேலும், இந்த செய்திகள் மக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு அனைத்து ஊடகங்களையும் மிரட்டி வருகிறது. இதனை நாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார் கனிமொழி. கனிமொழியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாக மேலும் அனலை பற்ற வைத்துள்ளது.



















