விளையாட்டு
இந்தியாவிற்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்ற வீராங்கனை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த போட்டியில் பதக்கங்களை வெல்வதற்காக அனைத்து நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்கள் வீராங்கனைகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். இந்த நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகளிர் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ தூக்கி இரண்டாவது இடம் பெற்றார். சீனா இதில் தங்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் உஸ்பெகிஸ்தான் வீரரை 6 -4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஹாக்கி போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது என்பதும் தெரிந்ததே.



















