தமிழ்நாடு
மத்திய-மாநில அரசுகள் சரியில்லை என்ற ரஜினியின் கருத்துக்கு தமிழிசை பதிலடி!
குழந்தைகளை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் சரியில்லை எனவும், அக்கறையில்லாமல் செயல்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
ரஜினியின் மனைவி லதா குழந்தைகள் பாதுகாப்புக்காக தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அங்கு நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் சரியாகச் செயல்படவில்லை. குழந்தை பாதுகாப்பில் அரசுகளுக்கு அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் காவல் துறையினர் சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று முறையாக ஏன் விசாரிப்பதில்லை என கேள்வி எழுப்பிய ரஜினி, நாட்டில் குழந்தை மாஃபியாக்கள் பெரிய அளவில் இருப்பதாக தனது வேதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இது தொடர்பாக பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ரஜினி என்ன காரணத்துக்காக அப்படிப் பேசினார் என்பது தெரியவில்லை. அதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை தான் மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி குழந்தைகள் பாதுகாப்புக்காகப் பணியாற்றி வருகிறார். குழந்தைகள் பாதுகாப்பில் ரஜினிக்கு என்ன அக்கறை இருக்கிறதோ அதே அக்கறை அனைவருக்கும் உள்ளது என்றார்.