தமிழ்நாடு
மகாபலிபுரத்திற்கு மாறும் தமிழக சட்டசபை: 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதா?
தற்போது உள்ள தமிழக சட்டசபை கட்டிடம் நெருக்கடியாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியின்போது புதிய சட்டசபை கட்டுவதற்காக ஓமந்தூரார் வளாகம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு பல கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் திடீரென ஆட்சி மாறியதால் அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாறியது. இதனால் புதிய சட்டசபை கட்டிடம் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நனவாகாமல் போய்விட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது .
இந்த நிலையில் தமிழக சட்டசபை கட்டிடம் கட்டுவதற்காக மகாபலிபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி மகாபலிபுரத்தில் திமுக அலுவலகம் கட்டுவதற்கு நிலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
மேலும் புதிய சட்டசபை மகாபலிபுரத்தில் வந்து விட்டால் அங்கு நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் திமுக அமைச்சர்கள் பலர் ஏக்கர் கணக்கில் பினாமி பெயர்களில் நிலத்தை வாங்கி குவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.