தமிழ்நாடு
தஞ்சை பெரிய கோவிலில் முதல்முறையாக தமிழில் அர்ச்சனை!

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் போலவே அவரது அமைச்சர்களும் அதிரடியாக தங்கள் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இதுவரை அறநிலையத்துறை குறித்து செய்தியே பெரிதாக ஊடகங்களில் வராத நிலையில் தற்போது அறநிலைத்துறை குறித்த செய்திகளும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று தமிழில் அர்ச்சனை செய்யும் முறையையும் அவர் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் அர்ச்சனை இன்று முதல் தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கட்டிய காலத்தில் இருந்தே சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழில் முதல்முறையாக அங்கு மந்திரங்கள் முழங்கியதை அடுத்து அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை மக்களுக்கு புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அன்னை தமிழில் புரியும் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு இருப்பதை பலர் வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் மட்டும் ஆகம முறைப்படி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.












