வணிகம்
சிறிய கார்கள் மலிவு, சொகுசு கார்கள் கூட விலை குறைவு – புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமல்!

தற்போது வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும், கூடுதலாக 17% முதல் 22% வரை இழப்பீட்டு வரியும் விதிக்கப்பட்டு, மொத்த வரிச்சுமை 45%–50% ஆக இருந்தது. இதனால், நடுத்தர மக்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாகவே இருந்தது.
ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் அந்த கனவை நிஜமாக்கப் போகின்றன. வரும் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய வரி விதிப்புகள், தீபாவளிப் பரிசாக மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகின்றன. சிறிய கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட பல வாகனங்களின் விலை குறைய உள்ளது.
🔹 சிறிய கார்களுக்கு பெரிய சலுகை
சிறிய கார்கள் மீது 28% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு 18% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி வாகனங்களில் 1200 சிசி-க்கு உட்பட்ட எஞ்சின் திறன் மற்றும் 4000 மிமீ-க்கு குறைவான நீளம் கொண்ட கார்கள் இதன் கீழ் வரும். டீசல் கார்கள் 1500 சிசி-க்கு மிகாமலும், 4000 மிமீ-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த மாற்றம், நடுத்தர வர்க்கத்தினரின் கனவை நிறைவேற்றப் போகிறது.
🔹 பெரிய மற்றும் நடுத்தர கார்கள் – ஒரு ட்விஸ்ட்
எஸ்யூவி, எக்ஸ்யூவி, எம்யூவி போன்ற வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், முன்பு 28% ஜிஎஸ்டி + 17%–22% கூடுதல் வரி சேர்த்து 45%–50% ஆக இருந்த நிலையில், இப்போது நேரடியாக 40% மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால் சொகுசு கார்களும் மலிவாகும் வாய்ப்பு உள்ளது.
🔹 பொதுப் போக்குவரத்து மற்றும் விவசாய துறைக்கு நன்மை
முச்சக்கர வாகனங்கள்: 28% → 18%
பேருந்துகள் (10 பேருக்கு மேல்): 28% → 18%
ஆம்புலன்ஸ்கள்: 28% → 18%
சரக்கு வாகனங்கள் (லாரி/டிரக்): 28% → 18%
டிராக்டர் ட்ரெய்லர்கள்: 28% → 5%
சாலை டிராக்டர்கள் (1800 சிசி மேல்): 28% → 18%
மோட்டார் சைக்கிள்கள் (3500 சிசி வரை): 18% ஜிஎஸ்டி
மோட்டார் சைக்கிள்கள் (3500 சிசி மேல்): 40% ஜிஎஸ்டி
🔹 வரி மாற்றத்தின் நோக்கம்
இந்த மாற்றங்கள், ஜிஎஸ்டி வரி அமைப்பை எளிதாக்கி, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு முறைக்கு மாற்றும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுகின்றன. சொகுசு மற்றும் ‘சின்’ பொருட்களுக்கே (sin goods) சிறப்பு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
அனைவருக்கும் பயன் தரும் இந்த புதிய வரி சலுகைகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்துதலை அளிக்கும் என்று அரசு நம்புகிறது.


















