வணிகம்
8ஆவது ஊதியக் குழுவால் எஸ்பிஐ ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு! புதிய சம்பள விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட 8ஆவது ஊதியக் குழு விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பலனாக அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது. தற்போதைய நிலைப்படி, புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், ஆரம்ப நிலை கிளர்க் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 30,000-ஐ தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நடுத்தர நிலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 75,000 வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது வங்கித் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. சமீபத்தில் SBI வங்கி 6,589 கிளர்க் (Junior Associate) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் விண்ணப்பித்தவர்கள் சம்பள அமைப்பை அறிய ஆவலாக உள்ளனர்.
தற்போது புதிதாக நியமிக்கப்படும் SBI கிளர்க்கின் அடிப்படை சம்பளம் ரூ. 26,730 ஆகும். இதனுடன் பல்வேறு படிகள் சேர்க்கப்பட்டால் மொத்த சம்பளம் சுமார் ரூ. 45,888 ஆகும். இதில் இருந்து சுமார் ரூ. 6,359 பிடித்தம் செய்யப்பட்டபின், கையில் கிடைக்கும் சம்பளம் சுமார் ரூ. 39,529 ஆகும்.
அகவிலைப்படி (DA) ரூ. 7,161, வீட்டு வாடகைப்படி (HRA) ரூ. 2,862, போக்குவரத்துப்படி ரூ. 850, சிறப்புப்படி ரூ. 7,083, மற்றும் சிறப்பு ஊதியம் ரூ. 1,200 ஆகியவை இதன் பகுதிகளாகும்.
பணிபுரியும் இடத்தைப் பொறுத்து சம்பள வேறுபாடு இருக்கும். பெருநகரங்களில் பணிபுரிபவர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகமாக இருக்கும். கிராமப்புறங்களில் பணிபுரிபவர்கள் குறைந்த வாழ்க்கைச் செலவுடன் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கலாம்.
மேலும் SBI வங்கியில் சம்பள உயர்வுக்கான தெளிவான அமைப்பு உள்ளது. அடிப்படை சம்பளம் ரூ. 26,730 இலிருந்து தொடங்கி, காலம்தோறும் திருத்தங்களின் மூலம் ரூ. 64,480 வரை உயரும். இது ஊழியர்களுக்கு நிலையான தொழில் வளர்ச்சியும் நம்பகமான எதிர்காலமும் வழங்குகிறது.
















