இந்தியா
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் ரகுராம் ராஜன்.. காங்கிரஸை ஆச்சரியமாக பார்க்கும் விமர்சகர்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு எழுச்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, ஒருசில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது என்பதும் மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு இந்திய அளவில் சவால் விடுக்கும் வகையில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் ஆட்சிதான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடங்கினார் என்பதும் இந்த பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்ததன் காரணமாக முக்கியத்துவம் பெற்றது என்பதும் தெரிந்ததே.
தமிழ்நாட்டில் ஆரம்பித்த இந்த ஒற்றுமை பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது என்றும் இந்த பயணம் 150 அதாவது நாளில் காஷ்மீரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் ஏற்கனவே பல அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் இணைந்து வருகின்றார்கள் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஸ்வாரா பாஸ்கர், பூஜா பட், அமோல் பலேகர், ரியா சென், ரஷ்மி தேசாய் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோர் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்ததை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி இந்த ஒரே ஒரு ஒற்றுமை பயணத்தால் மிகப்பெரிய எழுச்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பாக ரகுராம்ராஜன் இந்த பயணத்தில் கலந்து கொண்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியை பலர் பாசிட்டிவ்வாக புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிச்சயம் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மீதான ஒரு பாசிட்டிவ் பார்வையை ஏற்படுத்தும் என்றும் இந்த பார்வை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.