விளையாட்டு
தங்க மங்கை பி.வி.சிந்து: பேட்மிண்டனில் இந்தியா உலக சாதனை!
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்றதின் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அரை இறுதி போட்டியில் சீனாவின் சென் யு ஃபெய்யை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்த இந்தியாவின் பி.வி.சிந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவுடன் மோதினார். தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய இந்தியாவின் பி.வி.சிந்து மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி.சிந்து நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஏற்கனவே 2013, 2014-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றார் சிந்து. 2017, 2018-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவர் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. 2017-ஆம் ஆண்டில் இதே நஸோமி ஒகுஹாராவிடம் தங்க பதக்கத்தை பறிகொடுத்த சிந்து, நேற்று கழுத்தில் தங்க பதக்கத்துடன் இந்திய தேசிய கீதம் வாசித்ததும் மேடையில் நின்றபடிபடி கண்ணீர் மல்க விருதை ஏற்றுக்கொண்டார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை பெறுகிறார் பி.வி.சிந்து.