Uncategorized
ரொக்கமாக எதற்கு லட்சக்கணக்கில் எடுத்து செல்ல வேண்டும்? வங்கியில் இருந்து DDயாக எடுத்துச் செல்லக் கூடாதா?

ரொக்கமாக எதற்கு லட்சக்கணக்கில் எடுத்து செல்ல வேண்டும்? வங்கியில் இருந்து DDயாக எடுத்துச் செல்லக் கூடாதா என பலர் கேட்கிறார்கள்.
சொல்வதற்கு எதுவும் எளிது, எதார்த்தத்தில் இறங்கி பார்த்தால் தான் அதன் சிரமங்கள் புரியும். அதற்கு எனது சொந்த அனுபவத்தையே கூறுகிறேன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு அவசர சிகிச்சைக்காக திடீரெனம் பணம் லட்சக்கணக்கில் தேவைப்பட்டது.
தெரிந்த நல்ல உள்ளங்களிடம் பணம் கேட்டேன். கொடுப்பதாக கூறிவிட்டார்கள். நான் கோவை மருத்துவமனையில் இருக்கிறேன், எனது வங்கி கணக்குக்கு அனுப்பி விடுங்க, கடன் கொடுத்ததற்கும் ஆதாரம் இருக்கும் என்று கேட்டேன்.
ஆனால் ரொக்கமாகத்தான் உள்ளது. வங்கிக் கணக்குக்கு அனுப்புவது சிரமம் என்று கூறினார்கள். அவசரத்திற்கு பணம் கொடுப்பதே பெரிது … இந்த சமயத்தில் வங்கியில் கட்டி அதை எனக்கு அனுப்புங்கள் என்று கூறுவது நியாயமல்ல என்று கூறி திருப்பூருக்கு வந்து வாங்கி சென்றேன்.
ஆனால் மருத்துவமனையில் 2 லட்சத்துக்கு மேல் உங்க கணக்கில் பணமாக வாங்க முடியாது. வங்கியில் இருந்து மாற்றிக்கொள்ளுங்க, அல்லது DDயாக கொடுங்க என்று கூறி விட்டார்கள்.
அடுத்த நாள் அறுவை சிகிச்சை. முன்பணம் லட்சக்கணக்கில் கட்டியாக வேண்டும். வேறு வழி இன்றி எனது வங்கி கணக்கில் கட்டலாமா என அருகில் இருந்த எனது வங்கியின் கோவை கிளைக்கு சென்றேன்.
அவர்கள் எனது வங்கி கணக்கை பார்த்துவிட்டு உங்க கணக்கில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் தான் வரவு செலவு செய்ய முடியும்… ஏற்கனவே அதற்கு மீறி நிறைய செய்து விட்டீர்கள். எனவே பணம் கட்ட முடியாது என கூறிவிட்டார்கள்.
இப்படி சொன்னால் எப்படி? மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உடனே பணம் கட்டியாக வேண்டும் என கூறினேன். இல்லை எங்களுக்கு வந்திருக்கும் உத்தரவுகள் அப்படி, மீறி செயல்பட முடியாது. அப்படி செய்தாலும் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளாது என்று கூறிவிட்டார்கள்.
பின்னர் எனக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் மூலம் பேசி எனது பிரச்சினையை கூறி அனுமதி வாங்கி விட்டேன். மனிதாபிமானத்துடன் அனுமதி தந்துவிட்டார்கள்.
வருமானவரித்துறையிலிருந்து உங்களுக்கு கேள்வி வரும் என்றார்கள். வந்தால் வந்துவிடட்டும், நான் 25 வருடங்களுக்கு மேலாக முறையாக வருமான வரி கட்டி வருகிறேன். அதனால் எனக்கு பயமில்லை.
மேலும் நான் மருத்துவ சிகிச்சைக்குக்குத்தான் முறைப்படி செலவு செய்கிறேன், அவர்கள் கேள்வி கேட்டால் பதில் கூறி விடுகிறேன் என்றேன்.
என்ன காரணத்துக்காக பணம் கட்டுகிறேன் என்பதை தனியாக எழுதி தரச் சொன்னார்கள். எழுதி தந்த பின் அனுமதி தந்தார்கள். இது எனக்கு உயர் அதிகாரிகள் ரொம்பவும் பழக்கம் என்பதால் அவர்களிடமும் கொஞ்சம் மனிதாபிமானம் இருந்ததால் நடந்தது. இல்லையென்றால் சாத்தியமே இல்லை.
இதற்கு வெகு நேரம் பிடித்தது. மருத்துவமனையில் அவர்களை தனியாக விட்டுவிட்டு இங்கு அலைந்து கொண்டிருந்தேன்.
எனது கணக்கில் பணம் கட்டுவதற்கு கட்டணமாக தனியாக ஆயிரக்கணக்கில் பணம் எடுத்துக் கொண்டார்கள் என்பது வேறு விஷயம்.
பின்பு இரண்டு மாதத்திற்கு முன்பு மறுபடியும் வங்கியில் எனது கணக்கை முடக்கி விட்டார்கள். இத்தனை லட்சம் செலவு செய்திருக்கிறீர்கள் கொண்ட கணக்கை இயக்க அனுமதி இல்லை என்று கூறி மறுபடியும் எழுதி வாங்கிய பின்பு தான் இயங்க அனுமதித்தார்கள். எல்லாமே முறைப்படி மருத்துவமனைக்கு செய்யப்பட்ட செலவு தான். மருத்துவமனையின் வங்கி கணக்கில் தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டி உள்ளது?.
இப்ப சொல்லுங்க யார் மீது தவறு?
முறைப்படி வங்கி மூலம் செலவு செய்வதற்கு கூட வங்கியில் அனுமதிப்பதில்லை. உங்களுக்கு இவ்வளவுக்கு மேல் வரவு செலவு செய்ய அனுமதி இல்லை என்று மறுத்து விடுகிறார்கள்.
ஒருவரது வங்கி கணக்கில் எத்தனை லட்சம் செலவு செய்தாலும் இவர்களுக்கு என்ன? இவ்வளவு லட்சம் செலவு செய்வதற்கு உனக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்க வருமானவரித்துறைக்கு உரிமை உள்ளது. அதற்கு பதில் கூற வேண்டிய கடமை நமக்கும் உள்ளது.
அதை ஏன் வங்கிகள் ஏன் கேட்க வேண்டும்? கட்டுப்பாடு விதித்து தடுக்க வேண்டும்? கேட்டால் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் விதிமுறைகள் அப்படி… நாங்கள் ஒன்றும் கூற முடியாது என்று கூறுகிறார்கள். உண்மைதான்.
கருப்பு பணத்தை ஒழிக்க ரொக்கமாக செலவு செய்ய வேண்டாம் வங்கி மூலம் செலவு செய்யுங்க என்று ஒரு புறம் கூறுகிறார்கள். மறுபுறம் இப்படி வங்கி மூலம் செலவு செய்தால் தேவையற்ற கெடுபிடிகளை விதித்து வங்கி பக்கமே போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஒரே முரண்பாடாக உள்ளது.
















