தமிழ்நாடு
பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: இன்று முதல் அமல்!

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சமீபத்தில் தமிழக அரசு ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி கோவில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதி என்று அறிவித்திருந்தது. அதேபோல் கோவில் திருவிழா உள்பட மதம் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
எனவே சித்திரை திருவிழா உள்பட அனைத்து கோவில் திருவிழாக்களிலும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பழனி முருகன் கோவிலில் இணையவழியில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி என்று கூறியுள்ளது. இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வரும் என பழனி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அறிவிப்பு காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இணையதள வசதி இருக்காது என்றும் அவர்கள் இணையதளம் மூலம் எவ்வாறு முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


















