தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் ஆதரவு: அதிமுகவின் ஒற்றைத்தலைவர் ஆகின்றாரா?
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை சர்ச்சை நடந்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் கிட்டத்தட்ட ஓபிஎஸ் தனித்து விடப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் கருதுகின்றன.
எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர் இன்று தீவிர ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஆர் பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பில் ஒற்றை தலைமை குறித்த ஆலோசனை நடந்ததாகவும் கூறப்பட்டது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை என்ற ஆடுபுலி ஆட்டத்தில் ஈபிஎஸ் கை வலுத்து வருவதாகவும் குறிப்பாக செங்கோட்டையன் ஈபிஎஸ்-க்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் செங்கோட்டையன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.