தமிழ்நாடு
முதல்முறையாக அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்ட ஓபிஎஸ்!
முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக தற்போது ஆங்கிலம் இருப்பதாகவும் அதனை ஹிந்தி ஆக மாற்ற வேண்டும் என்று கூறினார். இதற்கு திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள் துறை அமைச்சர் அவர்கள் பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக்
காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.