இந்தியா
தொப்பையை குறைக்க காவலர்களுக்கு நோட்டீஸ்!

அதிக உடல் எடையுடன் தொப்பையுடன் உள்ள 186 காவலர்களுக்கு குஜராத் காவல்துறை தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டவர் அகமதாபாத் நகரின் துணை காவல் ஆணையர் அசோக் யாதவ். இவர் சமீபத்தில் அந்த நகரில் உள்ள பல காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது 13 துணை ஆய்வாளர்கள் உட்பட 186 பேர் அதிக உடல் எடையுடன் தொப்பையுடன் இருந்துள்ளதை கவனித்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த அவர், அந்த காவலர்களுக்கு உடல் எடை கூடியதற்கான விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும், உடல் எடையைக் குறைக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய துணை காவல் ஆணையர் அசோக் யாதவ், 100 கிலோ உடல் எடைக்கும் அதிகமாக உள்ள காவலர்களுக்கு மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், 40 சதவிகித காவலர்கள், 10 கிலோ வரை எடை குறைத்துள்ளனர். மீதமுள்ள 40 சதவிகித பேர் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடல் எடையைக் குறைக்கும் காவலர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




















