தமிழ்நாடு
அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு, 500 கோடி ரூபாய் இழப்பீடு… நோட்டீஸ் அனுப்பியது திமுக!

சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்து திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

#image_title
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியல் என ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், அவர் மீது சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்வினையாக தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக திமுக மூத்த வழக்கறிஞரும், எம்பியுமான வில்சன் மூலமாக அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் திமுக மற்றும் அதன் தலைவர் சார்பாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதாவது, உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக ஊடகங்கள், இணையதளங்களில் இது தொடர்பான வீடியோவை நீக்க வேண்டும்.
இழப்பீடு தொகையாக ரூபாய் 500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த கடிதம் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.