இந்தியா
இன்று நள்ளிரவு முதல் 10 மாவட்டங்களில் ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும் தினசரி இந்தியாவின் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் 80 ஆயிரம் என அதிகரிப்பதால் மத்திய மாநில அரசுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் நடக்காத மாநிலங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு பத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து ஒடிஸா மாநில அரசு தெரிவித்துள்ள அறிக்கை ஒன்றில் ’இன்று இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்றும் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே இரவில் நடமாடும் அனுமதி உண்டு என்றும் இவர்களை தவிர வேறு யாரும் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடமாட அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பகலில் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டுமென்றும் அப்படியே வெளியே வந்தாலும் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவிற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.




















