இந்தியா
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அவ்வளவுதான்: அச்சிடும் பணி நிறுத்தம்!
இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் சாமானிய மக்கள் முதல் சிறுகுறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்திய பொருளாதாரமே இதனால் சரிந்தது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என கூறப்பட்டாலும் அதன் பலனை அடையவில்லை. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைத் திரும்பப் பெறும் முடிவில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த அரசு தரப்பு தகவல் தி பிரிண்ட் ஊடகத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதால் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அர்த்தமில்லை. இந்நோட்டுகள் மெதுவாக வங்கி அமைப்புக்குத் திரும்பிப்பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 6.73 லட்சம் கோடி மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இது மொத்த ரூபாய் நோட்டுகளில் 37 சதவீதமாகும்.