தமிழ்நாடு
இரண்டு பெண்களின் செருப்புக்கு பாலீஷ் போட பிரஷ்ஷாக இருந்த மீசை: எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி கடும் தாக்கு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்த வா என பேசியதற்கு திமுக தரப்பு தொடர்ந்து பதிலடி கொடுத்தவாறு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரச்சாரம் செய்ய ஈரோடு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் எடப்பாடியை ஒரு பிடி பிடித்தார்.
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மீசை வச்ச ஆம்பளையா என பேசியதற்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது, அதிமுக வேட்பாளர் தென்னரசுவை மக்கள் விரட்டியடிப்பதை பார்த்தேன். மக்கள் எதிர்ப்பின் விரக்தியில் தான் எடப்பாடி பழனிசாமி, ‘மீசை வைத்த ஆம்பிள்ளையாக, வேட்டி கட்டிய ஆம்பிள்ளையாக இருக்க வேண்டும்’ என்று மீசையின் பெருமையை பேசினார்.
அவருடைய மீசையின் பெருமையை நான் பேசட்டுமா? 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பின் தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனையின் போது வாய்க்கு ஜிப் ஆக மாறியது அவரின் மீசை. கோடநாடு பெயரைக் கேட்டாலே, பயத்தில் காதை மூடிக்கொண்டது அவரின் மீசை. தூத்துக்குடியில் 13 அப்பாவிகளின் கழுத்தை நெரிக்க காரணமாக இருந்தது அவரின் மீசை. இரண்டு பெண்களின் காலின் செருப்புக்கு பாலீஷ் போடுவதற்கு பிரஷ்ஷாக இருந்தது அவரின் மீசை. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத் தான் மக்கள் மழுங்கடித்தார்கள் என்று கூறியபடி எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தைக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்.