தமிழ்நாடு
பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் பலி: தூத்துகுடியில் அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிக்கன் கிரேவி உடன் பரோட்டா சாப்பிட்ட தாய் மகள் கூல்ட்ரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தாய் கற்பகவல்லி மற்றும் அவருடைய மகள் தர்ஷினி ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கிவந்து வீட்டில் தயார் செய்து வைத்திருந்த பரோட்டாவுடன் சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களில் வயிறு எரிச்சல் காரணமாக அருகில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்று பத்து ரூபாய் குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பரோட்டா சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் தாய் மகள் இருவரும் வாந்தி எடுத்ததோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனில்லாமல் அடுத்தடுத்து தாய் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிக்கன் கிரேவி வாங்கிய கடை மற்றும் குளிர்பானம் வாங்கிய கடையில் விசாரணை நடத்தியதாகவும் சிக்கன் கிரேவி மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தாய் மகள் ஆகிய இருவருடைய பிரேத பரிசோதனை வந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.













