இந்தியா
அரபு நாட்டின் அரச குடும்பத்தினர் போல் நடித்து லட்சக்கணக்கில் மோசடி: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
ஐக்கிய அரபு நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்த நபர் ஒருவர் லட்சக்கணக்கில் பில் கட்டாமல் மாயமாகிவிட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னை ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அரச குடும்பத்தின் உறுப்பினர் என அறிமுகம் செய்து கொண்டு ஒருவர் அறை வாடகைக்கு எடுத்தார். இதனை அடுத்து அவர் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி வரை தங்கியிருந்த நிலையில் அதற்கான வாடகையை தராமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னுடைய அரச குடும்பம் மொத்தமாக பில்களை செட்டில் செய்து விடும் என்று கூறிக் கொண்டே உணவு உள்பட சொகுசு வாழ்க்கையை கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது 500க்கும் மேற்பட்ட பில் தொகை ரூபாய் 35 லட்சத்தை அடைந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகத்தினர் அவரிடம் பணம் கொடுக்கும் படி நெருக்கடி கொடுத்தனர்.
இதனை அடுத்து அபாரம் 23 லட்ச ரூபாய்க்கு செக்கை கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் சுதாரித்துள்ளனர். இந்த நிலையில் அந்த நபரை அறையில் சென்று பார்த்தபோது அவர் அறையில் இல்லை, அவர் அறையை காலி செய்திருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி அறையில் இருந்த சில வெள்ளிப் பொருட்களையும் அவர் திருடி கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினர் புகார் அளித்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரச குடும்பத்தினர் போல் நடித்த அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர் அறை வாடகைக்கும் எடுத்தபோது சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் ர் முன்கூட்டியே திட்டமிட்டு இதை செய்ததாக கூறப்படுகிறது.