தமிழ்நாடு
அட சூப்பர் போட்டி.. தொடங்கியது தேர்தல் பரபர.. தமிழகத்தில் இந்த 4 பேருக்கு இடையேதான் போட்டி!

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, 2 கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற போவது உறுதியாகி உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர போகிறது.
இதற்கு போட்டியாக அதிமுகவும் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து வருகிறது. அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, சமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற இருக்கிறது என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
இதற்கு இடையில் லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 40 தொகுதியிலும் மநீம வேட்பாளர்களை நிறுத்தும். மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் யாருடனும் கூட்டணி கிடையாது என்று அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த கட்சிகள் எல்லாம் போக மீதம் இருக்கும் ஒரே பெரிய கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். அமமுகவும் தேர்தலில் பெரும்பாலும் தனித்து போட்டியிடும் என்றுதான் கூறுகிறார்கள். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்கும் அமமுக செல்லாது, கமலுடனும் செல்ல வாய்ப்பில்லை என்பதால், அமமுக தனித்தே போட்டியிடும் என்று கூறுகிறார்கள்.
இதனால் லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் நான்கு முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது மும்முனை போட்டியே அதிகம் நிலவும். இந்த முறை கமல்ஹாசன், டிடிவி தினகரன் சேர்ந்து இருப்பதாலும், அதிமுக – பாஜக கூட்டணி வைப்பதாலும் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கிறது.






















