சினிமா
சிவகார்த்திகேயன் உடன் சிஎஸ்கே போட்டியை பார்த்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த புகைப்படங்கள் ரசிகர்களை ஏகப்பட்ட கணக்குகளை போட வைத்துள்ளன.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்தார். ஆனால், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டு பிகு பண்ணதாக நடிகை கீர்த்தி சுரேஷை களமிறக்கினார் பொன்ராம்.
ரஜினிமுருகன் படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ராஜயோகம் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். வெகு விரைவாக முன்னணி ஹீரோயினாகவும் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் உமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் நாயகியாகவும் கீர்த்தி சுரேஷ் உருவாகி உள்ளார்.
ரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரெமோ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், மூன்றாவது முறையாக சீமராஜா பிளாஷ்பேக் போர்ஷனிலும் இணைந்து நடித்தார்.
ஆனால், அதன் பிறகு இந்த ஜோடி தொடரக் கூடாது என யார் கண் வைத்தார்களோ தடை போட்டார்களோ என்னவோ தெரியவில்லை. சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடி இணையவே இல்லை.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்ற ஆட்டத்தை சிவகார்த்திகேயன் சதீஷ் உடன் வந்து கண்டு ரசித்தார்.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷும் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை கண்டு ரசித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இருவரும் சந்தித்ததை போல எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில், இருவரும் சந்தித்து பேசியதாகவும் கூடிய சீக்கிரமே மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.