தமிழ்நாடு
ஜெயலலிதா சிலை திறப்பில் மீண்டும் சர்ச்சை!
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புதிய சிலையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்தனர். இந்த சிலை திறப்பில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதாவின் உருவத்தை போல இல்லாமல் இருந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜெயலலிதாவின் உருவம் சுத்தமாக அந்த சிலையோடு ஒத்துப்போகவில்லை.
இதனையடுத்து அந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் 8 அடி உயரம், 800 கிலோ எடை கொண்ட ஜெயலலிதாவின் புதிய சிலை கடந்த அக்டோபர் 23-ம் தேதி சென்னை கொண்டுவரப்பட்டு இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஏற்கனவே திறக்கப்பட்ட சிலை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்ட சிலையும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த ஒரு தலைவரின் சிலையை திறப்பதற்கு முன்பு பட்டு போன்ற துணியால் போர்த்தி வைப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவின் சிலை ஒரு வெள்ளை துண்டைக் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.