தமிழ்நாடு
இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பணம் பெற்றுக்கொண்டும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக தடுப்பு ஊசி செலுத்தி வந்த மக்கள் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடுப்பூசி செலுத்தும் முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸ் ரூபாய் 1410 எனவும், கோவிஷில்டு தடுப்பூசி ஒரு டோஸ் ரூபாய் 750 க்கும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு ஊசி செலுத்துவதற்கு என்ற ஒரு பிரிவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


















