தமிழ்நாடு
ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது தான் சரி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் .
கடந்த சில நாட்களாக அமித்ஷா கூறிய இந்தி மொழிப் பிரச்சனை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. இந்திதான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என அமைச்சா் அமித்ஷா கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தோழமை கட்சியாக இருக்க கூடிய அதிமுக கூட இந்த விஷயத்தில் அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.
ஏற்கனவே இபிஎஸ் ஓபிஎஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது போல் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழும் ஆங்கிலமும் தான் என்று, மும்மொழியை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரதமரே தமிழ் மொழியை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்றும் அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் ஜெயகுமார் கூறியுள்ளார்.