தமிழ்நாடு
ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தது ஏன்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பல தரப்பில் இருந்தும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
காரில் சென்று கார் செல்லாத இடங்களுக்கு நடந்து நேரில் சென்று பார்வையிட்டால் தானே உண்மையான பாதிப்பு தெரியும் என பல தரப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஏன் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தேன் என்பதற்கான விளக்கத்தை தற்போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை கோரிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவரிடம் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர், சாலை வழியாக சென்று பார்வையிட்டால் முழு சேதமடைந்த பகுதிகளை பார்வையிட முடியாது எனவே முழு சேதங்களை பார்வையிட வேண்டும் என்பதால்தான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். டெல்டா மாவட்டங்களில் பல்வேறு சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டரில் பயணம் செய்யக்கூடிய நிலை வந்தது. சாலை மூலமாக ஆய்வு செய்த ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார் என கேள்வி எழுப்பினார்.



















