சினிமா
நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது: பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார், ராதாரவி அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால், நாசர் அணி வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் மூலம் ஒரு தலைவர், இரண்டு உப தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் விஷால் அணி சார்பில், நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும் ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் விஷாலுக்கு எதிராக புதிய அணி சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்ட பிரபல நடிகர் ராதாரவி நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் அணியை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டிவருகிறேன். ஆனால், ராதாரவி சொல்பவருக்கு ஆதரவாக பணியாற்றக் கூடாது, அப்படி பணியாற்றினால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று திமுக தலைமைக் கழகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். பிறகுதான் அது பூச்சி முருகன் என்று தெரிந்தது.
இந்த சிறிய தேர்தலுக்கு பெரிய கட்சி தலையிடுகிறது. அதனால் என்னை திமுகவிலிருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ராதாரவி.

















