தமிழ்நாடு
தேர்தல் அலுவலருக்கே ஷாக் கொடுத்த சி.வி.சண்முகம்: ஈரோடு கிழக்கு தேர்தலில் சுவாரஸ்யம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார்கள் கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அளித்த புகார் ஒன்று தேர்தல் நடத்தும் அலுவலரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணப்பட்டுவாடா குறித்து சோதனை நடந்து வருகிறது. பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் குக்கர் வழங்கியது உள்ளிட்ட புகார் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து 13 புகார்கள் வந்தது. அதில், சி.வி.சண்முகம் ஒரு சுவாரஸ்யமான புகார் ஒன்றை அளித்தார். 20,000 வாக்காளர்கள் தொகுதியில் இல்லை போலியாக சேர்த்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இதில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பில் வசிக்கும் நான், எனது மனைவி, மகனும் இந்த ஊரிலேயே இல்லை என்று எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.