தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கா? முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கொரோனா எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இன்று மீண்டும் அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை எட்டி விட்டதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் வகையில் சற்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















